தென்னையில் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தென்னையில் கருத்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2021-04-24 01:45 GMT

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் விளக்குகிறார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் தென்னையில் கருத்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் அரசம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி ஆகிய சுற்றுவட்டாரங்கள் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் அரசம்பட்டி நெட்டை நாற்றுக்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் ப்வேறு பகுதிகளுக்கு வருடம் முழுவதும் சுமார் 50 லட்சம் நாற்றுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர்விளைச்சல் தரக்கூடிய அரசம்பட்டி நெட்டை ரகம் தனிச்சிறப்ப வாய்ந்தது.

தென்பெண்ணை ஆற்றுப்படுகையிலும், பாரூர் ஏரி மற்றும் கிருஷ்ணகிரி அணையின் பாசன பகுதிகளிலும் வருடத்தின் பல மாதங்களில் தென்னையைக் தாக்கக்கூடிய கருந்தலைப்புழுக்கள், வெள்ளை ஈக்கள் ஆகிவற்றின் தாக்குதல் தென்படும். குறிப்பாக கோடை காலங்களில் தாக்குதல் அதிகம் காணப்படும்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகளை நேற்று விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் எடுத்து கூறினார். அப்போது அவர் கூறுகையில், மஞ்சள் நிறம், வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் பேப்பரில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளை 5 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.

மஞ்சள் விளக்குப் பொறிகளை தென்னை தோப்புகளில் வைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மரங்களின் மேல், தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும் பூசணங்களை அழிக்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மிலி வேப்ப எண்ணெயை கலந்து தென்னை ஓலைகளின் அடிப்புறத்தில் தெளித்து ஈக்களை கட்டுப்படுத்தலாம். வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது பொறிவண்டுகள் என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாக்கினால் வெள்ளை ஈக்களின் சேதம் பெருமளவு குறையும். அதிக அளவு பூச்சிக் கொல்லிகள் உபயோகிக்கும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்துவிடுவதால், ரசாயன பூச்சிக் கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சிறந்தது என்றார்.

மேலும், ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்மை அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சையப்பன், உதவி இயக்குநர் அருண்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு சுரேஷ், வேளாண்மை அலுவலர் ஒட்டுண்ணி மையம் (பொறுப்பு) அஸ்வினி, ஆத்மா மேலாளர் ராஜ்குமார், துணை வேளாண்மை அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செயல்விளக்கங்களை செய்து காண்பித்தனர்.


Tags:    

Similar News