ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களுடன் லாரி பறிமுதல்: ஒருவர் கைது

பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை லாரியுடன் போலீசார் பறிமுதல்.

Update: 2021-08-25 07:15 GMT

பறிமுதல் செய்யப்பட லாரி மற்றும் கைது செய்யப்பட்ட அன்பு.

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் எஸ்.ஐ. சின்னசாமி தலைமையில், எஸ்எஸ்ஐ பிரகலநாதன், போலீசார் ஆசைத்தம்பி, குமார் ஆகியோர் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அந்த லாரி, அங்கு நிறுத்தாமல் போலீசாரை கடந்து சென்றது. இதையடுத்து போலீசார் பின்தொடர ஆரம்பித்ததும், சிறிது தூரம் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது. இதில் இருந்து ஒருவர் இறங்கி தப்பியோடினார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்தனர்.

பின்னர், அந்த லாரியை சோதனை செய்ததில், அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 50 சாக்கு மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள், பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து லாரியுடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த லாரியின் டிரைவரும், உரிமையாளருமான கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தபால்மேடு அருகில் உள்ள கல்லாத்துபட்டி கிராமத்தை சேர்ந்த அன்பு(35) என்பதும், பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா பொருட்களை கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எஸ்.ஐ.சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து, லாரி டிரைவரும், உரிமையாளருமான அன்புவை கைது செய்து, லாரி மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரியில் இருந்து இறங்கி ஓடிய முரளி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News