மதகு அருகில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை மதகு அருகில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-01 07:00 GMT

கிருஷ்ணகிரி அணையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலையில் கிருஷ்ணகிரி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பெரியமுத்தூர், திம்மாபுரம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் கிருஷ்ணகிரி நகருக்கும் இந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திம்மாபுரம் பகுதியில் இருந்து குடிநீருக்கும் தண்ணீர் ஏற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றில் ஏராளமான ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு அழகாக காணப்பட்டாலும், இந்த செடிகள் தண்ணீரில் அழுகுவதால், அதிக கொசுக்கள் உற்பத்தியாவதுடன், தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.

அத்துடன் ஆகாய தாமரை செடிகள் அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த சூழ்நிலையில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த அணையின் அருகில் உள்ள ஆற்றில் பொதுமக்கள் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் இந்த துர்நாற்றத்தை கண்டு குளிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் மாசை ஏற்படுத்தும் இந்த ஆகாய தாமரை செடிகளை அகற்றிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News