மீலாடி நபி விழாக்குழு சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள்
கிருஷ்ணகிரியில் மீலாடி நபி விழாக்குழு சார்பில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மீலாடி நபி விழாக்குழு சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பூஜைப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். அதன்படி, 12வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் இன்று இஸ்லாமிய சகோதரர்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அஸ்லம் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டனர். இந்த முறை பூஜைப் பொருட்களுடன், கோவில் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.
இதையொட்டி பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கோடீஸ்வரன், இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில், ஷபீர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கராமத், ஜாமீர், தமிழக தர்கா பேரவை மாநில நிர்வாகி ஆசாத்காதிரி மற்றும் யாஹியா, தர்கா அமான், ஆன்ந்த, ரியாஸ், பப்லு, சாதிக், ரவி மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.