கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 800 -க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது

Update: 2021-09-10 13:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ஆம் தேதி 800  -க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட  கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இன்று வெளியிட்ட தகவல்: தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, வருகிற 12-ஆம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலைவேளையில்  ஒரு இடத்திலும், மாலையில் வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 800- க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளது.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் அரசு மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயனடைய உள்ளார்கள். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags:    

Similar News