காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி அருகே சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2021-05-09 06:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே, வெலகஹஅள்ளி செல்லும் சாலையில் ஆலப்பட்டி காலனி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆலப்பட்டி ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி மூலமாக இந்த பகுதிக்கு நீர் வழங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வரவில்லை. மேலும். ஊராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்தும் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், ஆலப்பட்டி காலனி மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சினை தீரும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் அலுவலர்கள் அங்கு வந்தனர். தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும். ஒகேனக்கல கூட்டுகுடிநீர் 2 நாட்களில் சரி செய்யப்பட்டு வழங்கப்படும். அதே போல புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அவர்கள் உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்:டு அங்கிருந்து திரும்ப சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News