கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அழைப்பு

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2021-05-10 13:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி, பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகளின் பொறுப்பும் பங்களிப்பும் அவசியமாகிறது.

தனியார் மருத்துவமனைகள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அனுமதியளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆக்சிஜன் உபயோகத்தை கண்காணிக்க அந்தந்த மருத்துவமனைகள் தனியாக குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பின் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மேலும், ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால்,  அவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு படுக்கையும், ஓசூர் சந்திரசேகரா மருத்துவமனையில் இரண்டு படுக்கைகளும் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாட்டில் உள்ள மருந்து பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகள் கிடைக்க தேவையான உதவிகள் செய்து தரப்படும். எனவே, தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News