திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போலீசை ஏமாற்றிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி தாலுகா பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் 23 வயதுடைய தனது உறவுக்கார பெண் போலீஸ் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் அந்த பெண் போலீஸ் கர்ப்பமானார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கூலித்தொழிலாளி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா இன்று வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.