கிருஷ்ணகிரியில் நகர திமுக சார்பில் கொண்டாட்டம்
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து கிருஷ்ணகிரியில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்..
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். இதைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாசிலை அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் தர்மன், நகர் மன்ற முன்னாள் தலைவர் பரிதாநவாப், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணன், முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரவிசந்திரன், மாவட்ட பிரதிநிதி சுகுமார், தலைமை கழக பேச்சாளர் கனல் சுப்பிரமணி, நகர வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, திமுக கொடியை ஏற்றி வைத்த நகர செயலாளர், 400 பெண்களுக்கு புடவை, பூந்தி, முககவசம், 268 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை ஆகியவற்றை வழங்கினார்.
இதையடுத்து திருவண்ணாமலை சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் 400 பேருக்கு துணிகள் மற்றும் உணவுகளையும் வழங்கினார். திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சங்கல்தோப்பு தர்காவில் நகர செயலாளர் வேண்டிக் கொண்டதால், அங்கு சிறப்பு பூஜை செய்து அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில், கட்சி முன்னோடிகள் பாபு, அன்வர் பாஷா, வேலு, ரெயின்போ சீனிவாசன், சமி, ரமேஷ், ரியாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.