தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

3 கோடி ரூபாய் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-24 09:45 GMT

கைது செய்யப்பட சையத் அகமதுல்லா.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த காடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரதீப், தன் தந்தை ஈஸ்வர மூர்த்தியுடன் சேர்ந்து அப்பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் புதிதாக கட்டி வரும் ரைஸ் மில் கட்டுமான பணிகளை பார்த்துவிட்டு தன் இன்னோவா காரில் சிவபிரதீப் வீட்டிற்கு திரும்பியுள்ளார். காரை அவரது டிரைவர் சதாம் ஓட்டியுள்ளார். அப்போது காரை வழிமறித்த நான்கு பேர் கும்பல் டிரைவரையும், பிரதீப்பையும் தாக்கி காருடன் அவர்களை கடத்தியுள்ளது. அவர்களது காருக்கு பின் டாடா சுமோவில் மூன்று பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வர மூர்த்தியிடம், 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், பணம் தராவிட்டால் அவரது மகனை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியதால், அவர்களுக்கு பயந்து 3 கோடி ரூபாயை திண்டுக்கல் பைபாசில் வைத்து இரவு, கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல், சிவ பிரதீப், அவரது டிரைவர் சதாம் ஆகியோரை விட்டுவிட்டு டாடாசுமோ காரில் தப்பியது. இதுகுறித்து சிவபிரதீப் காங்கேயம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை இன்னோவா காரில் கடத்திய கும்பல் பேசியதை வைத்து, ஜாபர் சாதிக், அகஸ்டின், பாலன், பாலாஜி, சக்திவேல், சையத் அகமதுல்லா மற்றும் ஒருவர் இருந்ததாகவும், கடத்தல் கும்பல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி, டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் டாடா சுமோ காரில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த பசீர், என்பதும், கடத்தல் கும்பலை வழிநடத்தியது கிருஷ்ணகிரி பழையபேட்டை முகமது கவுஸ் சாகிப் பாய் தெருவை சேர்ந்த சையத் அகமதுல்லா என்பதும் தெரிந்தது. பசீரை கைது செய்து, அவரிடமிருந்து, 20 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம், டாடாசுமோ கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சையத் அகமதுல்லா என்பவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்

Tags:    

Similar News