கன்னியாகுமரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த 3 பேர் கைது

கன்னியாகுமரியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த 3 பேரை கஞ்சா, கத்தி, அரிவாளுடன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-18 11:45 GMT

போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நரிக்குளம் பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்து வந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர், ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் அதனை விரட்டிச் சென்று பிடித்தனர்.

தொடர்ந்து அந்த ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் கொட்டாரத்தை சேர்ந்த அஜித்குமார் (20), செல்வன்புதூரை சேர்ந்த ஜெனிஸ் (20) ஆகியோர் இருந்தனர்.

மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் 6 கிலோ கஞ்சாவை ஒரு கவரில் வைத்து மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த போது அங்கு கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த கொட்டாரம் பகுதியை சேர்ந்த மெர்லின் மோசஸ்(20), மற்றும் மந்தானம்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்(20) ஆகியோர் போலீசாரை மிரட்டி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களையும் பிடித்த போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது அஜித்குமார் என்பவர் அரிவாளால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் அஜித்தை பிடிக்க முயன்றபோது அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து மெர்லின் மோசஸ், ஜெனிஸ், பிரகதீஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, அரிவாள், 6 கிலோ கஞ்சா , ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய அஜீத் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News