3 வயது குழந்தையின் அபார நினைவாற்றல்: உலக சாதனை படைத்து அசத்தல்

பள்ளிக்கூட வாசலில் காலடி எடுத்து வைக்காத 3 வயது குழந்தை உலக சாதனையாளர் ஆனார்.

Update: 2021-12-24 12:15 GMT

உலக சாதனை படைத்த மூன்றரை வயதே ஆன சிறுமி சிவனியா.

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் தம்பதிகளாக சித்திரைவேலு மற்றும் உமா மகேஸ்வரி தம்பதியரின் ஒரே மகள் மூன்றரை வயதே ஆன சிவனியா.

சிறு சிறு பொம்மைகளோடு விளையாடி பொழுதை போக்கும் தருணத்தை தவிர்த்து எளிதில் சிந்திக்க கூட முடியாத வகையில், இதுவரை மூன்று சாதனைகளுக்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ளார். ஆம் பள்ளிக்கூடம் பக்கம் காலடி எடுத்து வைக்காத குழந்தை சிவனியா உலக நாடுகளின் தேசிய கொடிகளை பார்த்தால் போதும், அது எந்த நாட்டின் கொடி அந்த நாட்டின் தலைநகர் என அனைத்தையும் ஒப்பித்து விடுகிறார்.

யோசிக்க கூட நேரம் கொடுக்காமல் மிக வேகமான அடுக்கி சொல்லும் இவர், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், கேரளாவின் அனைத்து மாவட்டங்கள் அந்த மாவட்டங்களின் தலைநகர் அனைத்தையும் கூறி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது 197 நாடுகளின் பெயர்கள், தலைநகரங்களை 4 நிமிடங்கள் 3 விநாடிகளில் கூறியதையொட்டி, புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார் குட்டி குழந்தை சிவனியா. அவரது சாதனையை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்று வழங்கி பாராட்டி உள்ளது.

இவை மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி மொழிகளில் உயிர்மெய் எழுத்துக்களை பிழையின்றி எழுதுவதிலும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தாயின் வழிகாட்டுதல் படி அதீத நினைவாற்றல் கொண்ட இந்த குழந்தை அதிசய குழந்தையாகவும் அப்பகுதியில் பிரபலமாக வலம் வருகிறார். கேரள மண்ணில் தமிழ் குழந்தையின் சாதனை, அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருவதோடு எதிர்காலத்தில் சிறந்த பெண்ணாக வளர்ந்து வருவார் என்ற எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளார்.

இவரது தந்தை சித்திரைவேலு பல ஆண்டுகளுக்கு முன்னரே தொழில் தொடர்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடிபெயர்ந்து விட்டார். அங்கு அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சின்னஞ்சிறு வீட்டில் வசித்து கொண்டு உமா மகேசுவரி மேற்கொண்ட தீவிர முயற்சியால் குழந்தை சிவனியா மிடுக்கான நபராக உருப்பெற்று வருகிறார். இரண்டு வயது முதல் இவரது செயல்பாடு, அதிக நினைவாற்றல் கொண்ட திறனை வெளிப்படுத்தியதை புரிந்து கொண்ட பெற்றோர் இவருக்கு பொது அறிவை கற்றுத் தருவதில் ஆர்வம் காட்டினர். பெற்றோரின் ஆர்வத்திற்கேற்ப சிவனியா கற்றலில் ஆர்வம் காட்டியதன் விளைவு இதுவரை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இன்டர் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் உலக சாதனைக்கான சான்று கிடைத்தது.

தனது மகளின் சாதனை குறித்து தாயார் உமா கூறுகையில், தொலைக்காட்சியில் வரும் பல தகவல்கள் குறித்து அவ்வப்போது சந்தேகத்தை கேட்டு தெளிவு பெற முயற்சித்ததன் மூலம் அவருக்கு கற்றலில் ஆதிக ஆர்வம் இருப்பதாக உணர முடிந்ததாக தெரிவித்தார். மேலும் அதிகளவில் பொதுவான தகவல்களை கற்று கொடுத்தபோது, அவரது நினைவாற்றலை பயன்படுத்தி சாதனை படைக்கலாம் என முயன்று அதில் வெற்றி கண்டுள்ளதாக கூறினார். சிறுமியின் ஆர்வம் மேலும் சாதனைகளை ஈட்டி தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பதையே இப்போதைய சாதனைகள் உணர்த்துகின்றன.

Tags:    

Similar News