கன்னியாகுமரியில் காணாமல் போன மூதாட்டி நெல்லையில் பிணமாக மீட்பு
குமரியில் காணாமல் போன மூதாட்டி, நெல்லையில் பிணமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (93) என்ற மூதாட்டி கடந்த 08.04.2022 அன்று காணாமல் போனார்.இது குறித்து அவரின் பேரன் சங்கர் என்பவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள CCTNS பிரிவின் உதவி ஆய்வாளர் பத்மா மற்றும் பெண் தலைமை காவலர் மேபின் சிம்லா ஆகியோர் CCTNS PORTAL மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத வயதான பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டதும் அங்கு வழக்கு பதிவாகியிருந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்தப் பிணம் காணாமல் போன மூக்கம்மாள் என்பது தெரியவந்தது.காணாமல் போன வயதான பெண்மணியை CCTNS பிரிவு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் பெண் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.