குமரியில் கனமழையால் பாதிப்பு: அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு
குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் இழப்பை சந்தித்தது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் முன்னிலையில் இன்று கன மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உறுதி அளித்தனர்.