குமரியில் பழச்சாறு என நினைத்து விஷம் குடித்த மாணவன் பலி
குமரியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது பழச்சாறு என நினைத்து விஷம் குடித்த மாணவன் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் நடு தெருவைச் சேர்ந்த சாதுராக், விவசாய நிலங்களுக்கு மருந்து அடிக்கும் தொழில் செய்து கொண்டு வருகிறார். இவரது மனைவி பியூலா, இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் இதில் 3-வது மகன் மணிகண்டன் (வயது 12) அங்கு உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
மணிகண்டன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறாக பூச்சிமருந்தை, ஜூஸ் என குடித்துவிட்டான். விஷமருந்தை குடித்த மணிகண்டன் வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர், அவர் வந்து பார்த்தபோது மணிகண்டன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மணிகண்டனை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.