கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு
கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக குமரியில் பூக்களின் விலை 3 மடங்காக உயர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் மலர் சந்தைக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயம் செய்யப்படும் பூக்கள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனிடையே தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, அதன் படி மல்லிகை பூ கிலோ 1,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரோஜா, தாமரை, அரளி உட்பட அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கார்த்திகை மாதம் கோவில் விழாக்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் வரும் நிலையில் கனமழை, பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.