கன்னியாகுமரியில் புது மாப்பிள்ளை குத்தி கொலை - மது போதையில் விபரீதம்
குமரியில் மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி சகாயமாதா தெருவை சேர்ந்தவர் கவாஸ்கர், 37 வயதான இவருக்கு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் நள்ளிரவில் தனது நண்பரான கன்னியாகுமரி அகஸ்தியர் தோட்டத்தை சேர்ந்த இருதய ஜான் ராஜா மற்றும் நண்பர்களோடு தனியார் லாட்ஜில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருதய ஜான்ஸ் ராஜா, கவாஸ்கரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்ததோடு படியில் இறங்கிவந்து ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார், ஆனால் செல்லும் வழியிலேயே கவாஸ்கர் இறந்தார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவாஸ்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் கொலையாளியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கன்னியாகுமரி மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.