நீட் தேர்வை தமிழக உள்பட எந்த மாநிலத்திலும் ரத்து செய்ய முடியாது: தளவாய் சுந்தரம்
நீட் தேர்வை தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ரத்து செய்ய முடியாது ரத்தானால் அது தனக்கு சந்தோஷம்தான்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் அதிமுக வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி 12 ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சகாயராஜ்க்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வாக்கு சேகரித்த நிலையில் அவருக்கு அந்த வார்டில் ஒட்டுமொத்த மக்களும் ஒன்று கூடி வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய தளவாய் சுந்தரம் ஏழைகளுக்கு பயன்படும் நீட் தேர்வை தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அந்த உண்மையை மறைத்து முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதால், அதிமுக வேட்பாளர்கள் மீது காவல்துறையினர் மூலம் 110 சட்டப்படி வழக்கு பதிவு செய்து, தேர்தல் களத்திற்கு செல்ல முடியாமல் அளவிற்கு காவல்துறையினர் அவர்களை மிரட்டி வருகின்றனர். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை மக்களை ஒடுக்கும் துறையாக திமுகவினர் ஆக்கி உள்ளனர், வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை கடத்தி செல்லவும் தயங்காத அராஜக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றார் தளவாய்சுந்தரம்.