கன்னியா குமரியில் சுற்றுலா பயணிகளை கவரும் சுரங்க மீன் கண்காட்சி
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு உள்ள சுரங்க மீன் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள இயற்கை காட்சிகள், கடற்கரைகள், பகவதி அம்மன் கோவில், போன்றவற்றை கண்டு ரசிப்பதோடு சொகுசு படகில் சென்று கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசிப்பார்கள்.
பள்ளி விடுமுறை, சபரிமலை சீசன் காலங்களில் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் சுரங்க மீன் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
கடலுக்கு அடியில் மீன்கள் நீந்தி செல்வதை பார்ப்பது போன்று 200 அடி நீளத்தில் சுரங்கத்துடன் கூடிய ராட்சத கண்ணாடி தொட்டியில் பலவிதமான வண்ணங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மீன்கள் கடலுக்கடியில் நீந்தி செல்வதைப் போன்று தத்ரூபமாக பெரிய ராட்சத கண்ணாடி தொட்டிகளில் மீன்கள் அணிவகுத்து செல்வது பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
பெரிய பெரிய கண்ணாடிகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் கண்காட்சி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது, மேலும் இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பியும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.