பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களால் குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் கடற்கரைகள், பூங்காக்கள், இயற்கை காட்சிகள், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தம காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.
மேலும் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை சொகுசு படகில் சென்று ரசிப்பார்கள்.
விடுமுறை தினங்கள் மற்றும் சபரிமலை சீசன் காலமான நவம்பர் 15 முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரையிலான நாட்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
அதன்படி வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தம காட்சிகளையும் கண்டு ரசித்தனர்.
பொது மக்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.