ஒரு கோடி செலவில் புது பொலிவு பெறும் 133 அடி வானுயர திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி கடலின் நடுவேஅமைந்துள்ள 133 அடி வானுயர திருவள்ளுவர் சிலை ஒரு கோடி செலவில் புதுப் பொலிவு பெற உள்ளது.

Update: 2021-06-10 12:30 GMT

கடலின் நடுவேஅமைந்துள்ள 133 அடி வானுயர திருவள்ளுவர் சிலை

சர்வதேச சுற்றுலா தலமாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி வானுயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த மொழியாம் தமிழ் மொழி குறித்தும் உலக பொது மறை நூலான திருக்குறள் குறித்தும் உலகம் அறிய செய்தது இந்த திருவள்ளுவர் சிலை. மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் கணபதி ஸ்தபதி தலைமையில் 1996 ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு 2000 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்துவைத்தார்.

கடல்மட்டத்திலிருந்து 38 அடி கொண்ட பீடத்தில் 95 அடி உயரத்தில் 7000 டன் எடையுடன் அமைந்துள்ள இந்த சிலை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசினால்தான் கடல் உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்ற நிலையில் கடந்த 2004, 2008, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்பட்டது.

இதற்காக ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ரசாயன கலவை இறக்குமதி செய்யப்பட்டு சிலை சீரமைக்கப்படும், இந்நிலையில் சிலை சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் தற்போது சிலை புனரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழகசுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் நடத்திய இணைய வழி கூட்டத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சிலையை சீரமைக்கவும் ரசாயன கலவை பூசவும் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

இதனிடையே அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் சில தினங்களில் நேரடியாக வந்து ஆய்வு செய்ய உள்ளனர், இதனைத்தொடர்ந்து சிலை புனரமைப்பு பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News