குமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாவாசிகள் கடலில் குளிக்க அனுமதி மறுப்பு
குமரியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க மற்றும் கால் நனைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் தொடர்ந்து சில நாளாக காலை நேரத்தில் கடல் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது, இதனால் அடிக்கடி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு நிலைமை சரியான பிறகு மீண்டும் இயக்கப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு முதல் கடல் அதிக நீர் மட்டத்துடன் காணப்படுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்கவும் மற்றும் கால் நனைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையும் மீறி ஒரு சில சுற்றுலாப் பயணிகள் கால் நனைக்க செல்ல முயலும் போது போலீசார் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் கன்னியாகுமரி வந்திருக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கடலின் அழகை பார்த்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.