ஸ்கூட்டரில் சென்ற மனைவியை வழிமறித்துவெட்டிய கணவர் கைது

நாகர்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற மனைவியை மறித்து வெட்டி சாய்த்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-04 06:38 GMT

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் அருகே உள்ள  கீழ மறவன்குடியிருப்பு என்ற ஊரில் வசிப்பவர்  சோனியா.  அதே பகுதியில் உள்ள ஒற்றையால்விளையை சேர்ந்தவர் ஜெயராஜ். 

14 வருடங்களுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்தனர்.  திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. இதில் இவர்களுக்கு  இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவன் பெயர் அபினாஷ். வயது12, மற்றவன் பெயர் அபி நிஷாந்த் வயது 10. சில வருடங்கள் அவர்கள்  சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில பிரச்னைகள் காரணமாக  அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுஅடிக்கடி  தகராறு நடந்து.  காதல் திருமண வாழ்க்கை கசந்து போனது. இதனால்  4 வருடங்களுக்கு முன்பு ஜெயராஜை விட்டு சோனியா பிரிந்து சென்று விட்டார். இருவரும்  தனியாக வசித்து வந்தனர். இருவரும் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று   முடிவு செய்து  விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. 

ஜெயராஜ் சொந்த ஊரில்  ஆட்டோ ஓட்டி வந்தார்.  சோனியா மணியன்விளையில்  மகன்களுடன் வசித்து  வந்தார். இந்தநிலையில் திங்கட்கிழமை அன்று மாலை  சோனியா சுசீந்திரம் ஆஸ்ரமம் சந்திப்பு அருகே  ஸ்கூட்டரில் சென்றார். அவருடைய  இளைய மகன் அபி நிஷாந்தும் உடன் சென்றான்.

அந்த நேரத்தில் அந்த வழியாக ஆட்டோவில்  ஜெயராஜ் வந்தார். எதிரே  சோனியா ஓட்டி வந்த  ஸ்கூட்டரை ஜெயராஜ் வழிமறித்து நிறுத்தினார். பின்னர் விவாகரத்து  வழக்கை வாபஸ் வாங்கி விட்டு  தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும் படி  சோனியாவிடம் கூறினார்.  ஆனால் அதற்கு உடன்பட சோனியா  மறுத்து விட்டார்.  இதனால் நடு ரோட்டில் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ் வேமாக சென்று  ஆட்டோவில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சோனியாவை வெட்டினார்.

இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அருகில் இருந்த மகன் அபி நிஷாந்த் கதறி அழுததையும் பொருட்படுத்தாமல் ஜெயராஜ்  சோனியாவை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சோனியா ரத்த வெள்ளத்தில் ரோட்டில்  சுருண்டு விழுந்தார். அப்போது இந்த தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், ஜெயராஜை விரட்டி சென்று பிடித்து சுசீந்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

படுகாயமடைந்து   உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த  சோனியாவை மீட்டு  ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தாக்குதல் குறித்து சுசீந்திரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர். 

Tags:    

Similar News