கஞ்சா வியாபார தகராறில் இரட்டை கொலை

கன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில் இரட்டை கொலை நடந்தேறியது.

Update: 2021-06-24 14:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் முருகன் குன்றம் கோவில் பகுதியில் ஒருவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த கன்னியாகுமரி போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் சுனாமி காலனி பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் (24) என்பதும் கஞ்சா பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் கொலை நடந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகேயுள்ள புதருக்குள் மற்றும் ஒரு வாலிபரின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது.

அவர் கன்னியாகுமரி அருகே உள்ள குண்டல் ஊரைச் சேர்ந்த செல்வின் (24) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் கன்னியாகுமரி டிஎஸ்பி தலைமையில் போலீசார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வியாபாரம் தொடர்பாக கும்பலுக்குல் நடைபெற்ற மோதலில் இந்த இரண்டு கொலைகள் நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இரட்டை கொலை நடந்த சம்பவம் கன்னியாகுமரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News