கனியாமூர் தனியார் பள்ளி இன்று திறப்பு

மாணவி மறைவுக்கு பின், கலவரத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி, இன்று திறக்கப்படுகிறது.

Update: 2022-12-05 04:14 GMT

கனியாமூர் தனியார் பள்ளி இன்று திறக்கப்படுகிறது. பள்ளியில் உள்ள 3வது தளத்திற்கு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி, கடந்த ஜூலை மாதம், உயிரிழந்தார். மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்பிரச்னையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு உரிய நியாயமான முறையில் நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி,  கடந்த ஜூலை 17ம் தேதி, பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில், பள்ளி வளாகத்திற்குள் போலீஸ் இருந்தும் அத்துமீறி கும்பலாக நுழைந்தவர்கள், பள்ளியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வகுப்பறைகளில் இருந்த பர்னிச்சர் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டது. மேஜை நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டது. பள்ளி வளாக பகுதிக்குள், தீ பற்றி எரிந்தது, பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த கலவரத்தை ஒடுக்க, போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்; பள்ளிக்குள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பள்ளியும் உடனடியாக மூடப்பட்டது. இச்சம்பவம் குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவத்தின் போது 'வாட்சப்' மூலம் தவறான வதந்திகளை பரப்பியவர்கள் மீதும், போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தனியார் பள்ளி மூடப்பட்டதால், அங்கு படித்த மாணவ, மாணவியர் கல்வி நலன் பாதிக்கப்பட்டது. அடுத்து, கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதில், மீண்டும் பள்ளியை திறந்து, வகுப்புகளை நடத்த அனுமதிக்குமாறு பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், போலீசார் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், கோர்ட் அனுமதியுடன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த கோர்ட் இன்று (டிச.5) முதல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த பள்ளியில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் இன்று முதல் நடக்கும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். வழக்கம் போல, பள்ளிக்கு சென்று வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் நேற்று பள்ளியை பார்வையிட்டு, பள்ளிக் கட்டிடத்தின் 3-வது தளத்தை தவிர்த்து இதர 3 தளங்களில் வகுப்புகள் நடத்த அனுமதியளித்தனர். 3-வது தளத்துக்கு மட்டும் 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

Similar News