அத்தாணியில் தற்செயல் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றிய வீட்டு வசதித்துறை அமைச்சர் !
Minister Muthusamy heard grievances following election rules
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சியில் 3வது வார்டு பெருமாபாளையத்திற்கு தற்செயல் தேர்தல் வரும் ஜூன் 9-ஆம் தேதி நடக்கின்றது. தேர்தல் முடிவு 12-ஆம் தேதி வெளிவரும். இந்நிலையில் இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாந்திமணியை ஆதரித்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாவட்டச் செயலாளர் நல்லசிவம் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம், பேருராட்சித் தலைவர் புனிதவள்ளி, முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தில்கணேஷ் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.
ஆனால், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் வரும்போது, அவருக்கு பொன்னாடை மற்றும் ஆரத்திகள் எடுத்து 3வது வார்டு பெருமாபாளையம் காலனி பகுதி மக்கள் வரவேற்றனர்.அரசு வாகனத்தில், மெய் காப்பாளர்களுடன் வந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின் படி வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என அங்கு கூடியிருந்தவர்களிடம் கூறினார். மாறாக, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டு நேரில் பார்வையிட்டார்.
பின்பு, குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி, உங்களுக்கு எல்லாம் தெரியும், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கும்பிடு போட்டுக் கூறி, வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் பொதுமக்களை மட்டும் சந்தித்து விட்டு சென்றார்.
அமைச்சர் முத்துசாமி, எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி வெங்கடாசலம் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி வாக்கு சேகரிக்காமல் சத்தமில்லாமல் சென்றனர். இது அப்பகுதி மக்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.