ஈரோட்டில் மினி டைடல் பார்க்: சட்டசபையில் நிதியமைச்சர் அறிவிப்பு
ஈரோட்டில் மினி டைடல் பார்க் உருவாக்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழக சட்டசபை இன்று (மார்ச்.20) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றார்கள்.
ஈரோடு, செங்கல்பட்டு, திருநெல்வேலியில் புதிய தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும். இவற்றின் மூலம் 12 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், ஏழு மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் (Neo-Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், ஒவ்வொரு மையத்திலும் தலா சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் கூறினார்.