நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கை மேற்கொண்டு, பதிவேடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.

Update: 2023-03-24 13:00 GMT

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதிதிட்டம், 15வது நிதிக்குழு மான்ய திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கோப்புகள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக்கோப்புகளை உடனடியாக முடித்திடவும் மற்றும் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடும் வகையில் ஆழ்துளை கிணறுகளை முழுமையாக பராமரித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சுபா, உட்பட துறைசார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News