ஈரோட்டில் நிலத்தகராறில் தொழிலாளி வெட்டி கொலை; ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது

ஈரோட்டில் நிலத்தகராறில் தொழிலாளியை வெட்டி கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, மகன், பேரன் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-06 11:09 GMT

கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி, சித்தீஸ்.

ஈரோடு எல்லப்பாளையம் அருகே உள்ள தொட்டம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி இரவு, கணேசன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த உறவினர்கள் 3 பேர் நிலத்தகராறு தொடர்பாக, கணேசனுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 3 பேர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால், கணேசனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த கணேசன், கீழே விழுந்ததில் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் உறவினர்களான 3 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அப்பகுதியினர் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் டவுன் டி.எஸ்.பி ஆனந்தக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் கணேசனின் உடலை கைப்பற்றி,  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் கணேசனின் உறவினரும், பங்காளியுமான மாதேஸ்வரன் (வயது 50)  என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மாதேஸ்வரனின் தந்தை முத்துப்பாண்டி என்கிற முத்துசாமி (வயது 85) மற்றும் மாதேஸ்வரனின் மகன் சித்தீஸ் (வயது 28) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். பின்னர், மாதேஸ்வரன் கொடுத்த தகவலின் படி தலைமறைவாக இருந்த முத்துப்பாண்டி , சித்தீஸ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணேசனுக்கும், முத்துசாமி குடும்பத்தினருக்கும் இடையே 4 சென்ட் இடம் தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இரவு கணேசன் மதுபோதையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக மூன்று பேரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி , மகன் மாதேஸ்வரன் மற்றும் பேரன் சித்தீஸ் ஆகியோர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நிலத்திற்காக உறவினரை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் தாத்தா, மகன், பேரன் என மூன்று பேர் சிறை சென்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News