கடலூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி
கடலூர் பாதிரிக்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் மழை நீர் சூழ்ந்து வீடுகள் சேதமடைந்தன, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோளின்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதிரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிரிஜா செந்தில்குமார் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி 1,000 பேருக்கு அரிசி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேவல் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.