மறு கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெள்ள சேதம் பற்றி மறு கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-03 13:06 GMT

கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மீண்டும் கணக்கீடு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கடந்த 1 ஆம் தேதி வெளிவந்த துக்ளக் பத்திரிகையில் விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கேலி சித்திரத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது, மேலும் இதுகுறித்து துக்ளக் பத்திரிக்கை விவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டும் இன்றி விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்திய துக்ளக் பத்திரிகையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிவாரண உதவிகள் எதுவும் அரசு தொடர்பாக அறிவிக்காதது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் தமிழகத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு  மிகக்குறைவாக அறிவித்து வருகின்றனர். உண்மையான பாதிப்பை தெரியப்படுத்தாமல் அரசு அதிகாரிகள் கொடுக்கும் விவரத்தை தமிழக அரசு கூறி ஏமாற்றி வருகின்றனர். 

மேலும் மழையால் பாதிப்பிற்காக  4 ஆயிரத்து 625 கோடி நிவாரணம் தொகையை மத்திய அரசிடம் தெரிவித்து நிவாரணம் கேட்டு உள்ளனர். ஆனால் தமிழகத்தில் பயிர் பாதிப்புகள் மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்‌‌. இதுதொடர்பாக தி.மு.க. அரசு அனைத்தும் தெரிந்துகொண்டும் கணக்கெடுப்பு குறைவாக எடுத்து, குறைவான தொகை கேட்டிருப்பதும், அந்த தொகை பெறுவதற்கு தமிழக அரசு அழுத்தம் தராதது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது மட்டுமின்றி தற்போது தமிழக அரசு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிருக்கு 20 ஆயிரமும், மறு நடவு விவசாயிகள் செய்தால் ஏக்கருக்கு 2,400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மறு நடவு என்பது டெல்டா மாவட்டங்களில் ஏற்கக் கூடியதாக இல்லை. ஏனென்றால் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டு தண்ணீர் வழங்காது. அப்போது டெல்டா மாவட்டங்களில் மறு நடவு செய்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்‌ என்றார். 

Tags:    

Similar News