மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-02-20 12:44 GMT

நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்காத மாநகராட்சியை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 

நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு  பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் சுகாதார பணியாளர்கள் சங்க செல்வராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு தினகூலியாக ரூ.721 என நிர்ணயித்து அரசாணை 62-ஐ நடைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அந்த அரசாணையை செயல்படுத்தாமல் பழைய ஊதியத்தையே வழங்கி வருகிறது. இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி செவி மடுக்கவில்லை. அடுத்த மாதம் முதல் தின கூலியாக ரூ.721 வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்  என கூறினார்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 3,600 பேர் உள்ளனர். இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். இதனை வழங்க வலியுறுத்தி 5 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் பணம் இல்லை, நிதி இல்லை என கூறி வருகின்றனர்.

இதனால், இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். அடுத்த மாதம் அரசாணையின் படி சம்பளம் வழங்கவில்லை என்றால் தூய்மை பணியாளர்கள் அனைவரும் அனைத்து வார்டுகளிலும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி, நிதி திரட்டி மாநகராட்சியிடம் கொடுக்க முடிவு செய்து உள்ளோம் என்று கூறினர்

Tags:    

Similar News