வண்டலூர் பூங்கா சிம்பன்சி குரங்கு ஆதித்யா: முதல் பிறந்தநாள் கேக் வெட்டி அமர்க்கள கொண்டாட்டம்..!

வண்டலூர் பூங்காவில் உள்ள சிம்பன்சி குரங்கு குட்டியான ஆதித்யா பிறந்தநாளை கேக் வெட்டி அமர்க்களமாக பூங்கா நிர்வாகம் கொண்டாடியது.

Update: 2022-06-10 12:15 GMT

வண்டலூரில், முதல் பிறந்த நாளிலேயே பார்வையாளர்கள் மத்தியில் ஹீரோவான சிம்பன்சி குரங்கு குட்டி ஆதித்யா.

சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனகூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகள் இடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரில் உள்ள 95-99சதவீதம் டி.என்.ஏ சிம்பன்சிகளின் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீட்டர் அதாவது மூன்று முதல் நான்கு அடி இருக்கும்.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இந்த பூங்காவில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்கின்றனர், வண்டலூர் பூங்கா அதிகாரிகள்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 1-10-2005 ல் 29 வயதான கொம்பி மற்றும் 24 வயது கெளரி (சூசி) ஆகிய சிம்பன்சி குரங்கு ஜோடி கொண்டு வரப்பட்டது. இந்த  ஜோடிக்கு 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த சிம்பன்சி குட்டியின் செல்லப்பெயர்தான் ஆதித்யா. இதன் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி அமர்க்களப்படுத்துவது என பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் தீர்மானித்தனர்.

அதன்படி, பூங்கா பார்வையாளர்களுடன் சேர்ந்து சிம்பன்சி குட்டியின் முதல் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வண்டலூர் பூங்கா துணை இயக்குநர் காஞ்சனா தலைமை வகித்தார். பிறந்த நாள் விருந்தின் ஒரு பகுதியாக சிம்பன்சிகளுக்கு மிகவும் பிடித்தமான உறைய வைத்த பழ கேக் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பூங்கா அதிகாரிகள் கூறுகையில், வண்டலூரில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கவனத்தை மேலும் வெகுவாக கவரும் வகையில் சிம்பன்சி குட்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பொதுவாகவே, பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் சிற்றுண்டி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

Similar News