காட்டாங்கொளத்தூரில் வேகமாக பரவும் கொரோனா

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வேகமாக பரவும் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

Update: 2021-04-27 16:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளும், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் ஆகிய நகராட்சிகளும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியும் உள்ளன. இதில், நாடு முழுவதும் 2-வது அலை கொரோனா பரவி வரும் வேளையில், தமிழகத்திலேயே செங்கல்பட்டு மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளன.

இந்நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவின் பேரில், மண்ணிவாக்கம் ஊராட்சி செயலர் ராமபக்தன், வண்டலூர் ஊராட்சி செயலர் வீரராகவன், ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன், நெடுங்குன்றம் ஊராட்சி செயலர் ஏழுமலை, ஊனமாஞ்சேரி ஊராட்சி செயலர் டில்லி, நல்லம்பாக்கம் ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணன், வேங்கடமங்கலம் ஊராட்சி செயலர் கோமதி, காரணைப்புதுச்சேரி ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மேற்படி ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் அடித்தல், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மேற்படி ஊராட்சிகளில் உள்ள முக்கிய பகுதிகளில் கொரோனா அதிகம் உள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பேரி கார்டுகள் மூலம் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம்களும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக பரவும் கொரோனாவால் பல ஊராட்சிகளில் உள்ள முக்கிய பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுவதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News