செங்கல்பட்டில் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்பரவும் அபாயம்!

சாலையோரம் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-07 12:30 GMT

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி அருகில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில், முகக்கவசம், கையுறை, காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து மருத்துவக் கழிவுகள் ஆகியவை சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் நோய் தோற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில் செங்கல்பட்டு, வேதநாராயணபுரம், இருங்குன்றப்பள்ளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் குழாய்கள் செல்வதால் மருத்துவக் கழிவு நீரில் கலந்து பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் தற்போது கொரொனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இது போன்ற மருத்துவ கழிவுகளை சாலையோரம் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே கொட்டி வருபவர்களால் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடப்பதகவும் இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News