கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்கியது.

Update: 2021-12-05 04:30 GMT

கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்த கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நலிந்தோர் நலம் காக்கும் அன்னை அறக்கட்டளை சார்பில் அரிசி, காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் கல்குவாரி தொழிலையே பெரிதும் நம்பி வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கல்குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்து வந்ததால் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் இருளர் குடும்பத்தினர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நலிந்தோர் நலம் காக்கும் அன்னை அறக்கட்டளை நிறுவனத்தினர் அப்பகுதிக்கு நேரில் சென்று 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தலா 2 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை நேற்று இரவு வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு, அதன் நிறுவனர் வினிதாசுரேஷ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் டி.மதன்லால், நிர்வாக இயக்குனர்கள் பி.எஸ்.நாகராஜ், ஏ.எம்.டி.இக்பால், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கீரப்பாக்கம் ஊராட்சிமன்ற 4-வது வார்டு உறுப்பினர் சசிகலாதனசேகரன் கலந்துகொண்டு மழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்த 300-க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Tags:    

Similar News