நீண்ட நாட்களாகியும் வடியாத வெள்ளம்: வடகால் மக்கள் கடும் அவதி
பல நாட்கள் கடந்தும் வடியாத வெள்ளத்தால் வடகால் கிராமத்தினர் 1000க்கும் மேற்பட்டோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக செங்கல்பட்டு சுற்று வட்டார ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரி நீர், செங்கல்பட்டு, வல்லம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு நாட்களாக தேங்கியுள்ளது. விடாத மழையால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருப்பதால் பொதுமக்கள் பெருமளவில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த வடகால் கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களால் வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல ஒரு படகு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இங்கு தங்கியிருப்போர், 4 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைக்காக ஒரு சிலர் மட்டும் வெளியில் வந்து செல்கின்றனர்.
மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக படகுகளை பயன்படுத்தி செல்லும் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டிகள் மூலம் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு செல்கின்றனர் இதன் மூலமாக அவர்கள் தங்களுடைய அன்றாட பணிக்காக இருசக்கர வாகனத்தில் சிங்கப்பெருமாள் கோயில் சென்று அங்கிருந்து பேருந்து நிலையத்தில் சென்னை புறநகர் பகுதியில் வேலை செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
அதேபோல வடகால் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. பெரும்பாலும் இந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் கால்நடைகள் இருக்கிறது . அவை அனைத்தும் நோயால் சிக்கித் தவிக்கிறது என நேய்யால் பொதுமக்கள் கூறுகின்றனர். அதேபோல பொதுமக்களுக்கு மருத்துவத்திற்கு செல்வதற்கும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும் வழி தெரியாமல் இப்போது மக்கள் சிக்கி வருகிறார்கள்.
அரசு இந்த இடத்திற்கு பாலம் மற்றும் கால்வாயை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும் என கோரிக்கை வைக்கின்றனர்