செங்கல்பட்டில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டன
செங்கல்பட்டில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
இன்று காலை 4 மணி முதல் மே 24 வரை இருவாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலைமுதல் செங்கல்பட்டு தலைநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இயங்கின.
3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் ஏப்ரல் 26 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை, பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். உணவு மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடித்திறுத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து திரையரங்குகள் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இதன் காராணமாக மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.