செங்கல்பட்டு மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீர்

செங்கல்பட்டு மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீரால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2021-11-04 04:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தென்னேரி ஏரியில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால், வாலாஜாபாத் வட்டம் தென்னேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால், "தென்னேரி ஏரி" அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் உபரிநீர் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நீஞ்சல் மடுவு வழியாக, செங்கல்பட்டு நகரம் அருகில் பாலாற்றில் இணைகிறது. இதன் காரணமாக உபரி நீர் செல்லும் நீஞ்சல் மடுவினை ஒட்டியுள்ள கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் மடுவிற்கு செல்ல வேண்டாம் எனவும் கிராமங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு தடை செய்ய காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பனையூர்,எழிச்சூர், பூண்டி, கண்ணடியான்பாளையம், குருவன்மெடு, வேண்பாக்கம், ரெட்டிபாளையம், சாஸ்திரம்பாக்கம், ஆத்தூர் வடகால், காந்தலூர், புலிப்பாக்கம், திம்மாவரம் மற்றும் செங்கல்பட்டு நகர பகுதி, மகாலட்சுமி நகர். உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் நீஞ்சல் மடுவில் இறங்கவோ, மடுவினை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மடுவிற்கு செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும், மேலும் வீட்டில் உள்ள சிறுவர்,சிறுமிகளையும் நீஞ்சல் மடுவின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சிலர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை மதிக்காமல் நீஞ்சல் மடுவில் மீன் பிடிக்கவும் வேடிக்கை பார்க்கவும் செல்கின்றனர். எனவே நீஞ்சல் மடுவிற்கு செல்பவர்களை செல்பவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News