செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் எதிர்பாராத விதமாக தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவபிரிவில் பிரசவ வார்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டிடத்தை அதிகரிக்க புதியதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் தனி அறைகளாக பிரிக்க வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் வெல்டிங் வேலைகள், குளர்சாத வசதிக்காக நடைப்பெற்று வருகிறது. தனி அறைகளாக பிரிக்க நடைபெற்று வந்த வெல்டிங் வேலையின் போது எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் குழாயின் மீது தீப்பொறி பட்டவுடன் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.
இதனால் அருகில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே அலறி அடித்து கொண்டு வந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வந்து பார்த்தபோது ஆக்சிஜன் குழாயில் மீது ஏற்பட்ட தீப்பொறியின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகம் சற்று பரப்பரப்புடன் காணப்பட்டது.