செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
ஆலப்பாக்கம் அருகே புள்ளி மான் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
செங்கல்பட்டு வனச் சரகத்துக்குட்பட்ட வல்லம், திருவடிச்சூலம், அஞ்சூர் உள்ளிட்ட காப்புக்காடு மலைப் பகுதிகளில் சிறுத்தை, மற்றும் அரிய வகை புள்ளி மான்கள் உள்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. செங்கல்பட்டு-மாமல்லபுரம் செல்லும் சாலை வனப்பகுதியின் அருகில் உள்ளது.
சில நேரங்களில் மலையிலிருந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகவும், பிற விலங்குகள் விரட்டும்போதும் மலை அடிவாரத்துக்கு வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது.
இந்நிலையில், இன்று மாலை 3 வயதுள்ள ஆண் புள்ளிமான் ஆலப்பாக்கம் அருகில் உள்ள சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த செங்கல்பட்டு வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டனா். பிரேதப் பரிசோதனைக்கு கால்நடைத்துறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் மான் மீது விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனம் குறித்து வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.