கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-26 06:45 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய கட்டுநர் சங்க கல்பாக்கம் மையத் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய அளவில் கடந்த சில மாதங்களுக்குள் சிமெண்டு, இரும்பு, குழாய், மின்சாதன பொருட்கள், ஜன்னல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை சுமார் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கட்டிட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, கட்டுமான பொறியியல் துறை மந்தநிலைக்கு சென்றுவிட்டது.

அரசு கட்டுமான ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர்கள்,  அவற்றை ஒப்பந்தம் செய்த தொகையில் கட்டுமான பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், வீடு கட்ட முடிவு செய்தவர்களும், இந்த பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே,  அனைத்து கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக,  அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுனர் சங்க அமைப்பினர் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத் தலைவர் வரதன், கூடுவாஞ்சேரி பொறியாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி, அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் முரளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News