வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கொரோனா காரணமாக மூடல்

11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கொரோனா காரணமாக மூடல்

Update: 2021-04-20 14:30 GMT

11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இன்று முதல் மூடப்படும் என சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும். அவை 6 மாதம் தங்கியிருந்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்ததால் வேடந்தாங்கல் ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து முன்னதாகவே பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அரியவகை பறவைகளான நத்தை குத்தி, நாரை, சாம்பல் நாரை, வெள்ளை நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன் நீர்காகம், கூழைக்கிடா என 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது. பறவைகள் வந்த நிலையில் சரணாலயத்தை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் சரணாலயம் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாகவும், பொதுமக்கள் வந்து ஏமாற்றமடையவேண்டாம் என சரணாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News