செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த வெள்ளம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகலில் பலத்த மழை பெய்தது; தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையானது மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பெய்தது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஒருசில இடங்களில் வீடுகளை மழைநீர் சூழந்தது. சுமார் 1 மணிநேரம் இடைவிடாது பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.