செங்கல்பட்டு அருகே தேமுதிக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கல்பட்டு அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக தேமுதிக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-23 06:30 GMT

பெட்ரோல் குண்டு வீச்சி எரிந்த தேமுதிக நிர்வாகியின் வீடு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தெல்லிமேடு பகுதியில் வசிப்பவர் ராஜசேகர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். தேமுதிகவில் அப்பகுதி நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தார் வழக்கம்போல் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நள்ளிரவில் திடீரென மேற்கூரை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பினர்.

இதனை கண்டு ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்துள்ளனர். இதில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

நேற்று நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் மற்றொரு தரப்புக்கும் ராஜசேகர் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராஜசேகர் தரப்பு துணைத்தலைவர் போட்டியில் வெற்றி பெற்றது. இதனை மனதில் வைத்து மர்ம நபர்கள் அவர் கூரை வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த பாலூர் போலீஸார் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News