ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுநீர்; செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்

ரசாயன கழிவுநீர் ஏரியில் கலப்பதால் ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2021-08-13 17:15 GMT

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.

செங்கல்பட்டு அருகே தனியார் பழைய இரும்பு குடோனிலிருந்து ஏரியில் விடப்படும் ரசாயன கழிவுநீர் காரணமாக மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வ.ஊ.சி நகரில் உள்ள ஏரியில், மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் இந்த ஏரியிலிருந்து வ.ஊ.சி நகர், கேகே நகர், சக்கரவர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகரித்து வருவதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  கடும் அவதிகுள்ளாசி வாந்தி எடுக்கும் நிலையும் உள்ளது.

எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி மூலம் ஏரி ஓரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அருகில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு குடோன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News