வேனில் கடத்த முயன்ற ஒன்றரை டன் குட்கா பறிமுதல்

Update: 2021-01-22 05:30 GMT

கூடுவாஞ்சேரியில் வேனில் கடத்த முயன்ற சுமார் ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வேன் டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் ஒருவரது வீட்டில் இருந்து பண்டல் பண்டலாக குட்கா பொருட்களை இரண்டு வேன்களில் ஏற்றி கொண்டிருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

மேலும் போலீசாரை கண்டதும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த வாலிபருக்கு இரண்டு கை கால்களும் உடைந்தன. உடனே அந்த வாலிபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பிடிபட்ட 2 பேரையும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் வேன் டிரைவர்கள் என்பதும், அதில் ஒருவர் வியாசர்பாடியை சேர்ந்த அர்ஜுனன்(50), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது ஜாபர்(36) என்பதும், இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றவர் ராஜஸ்தானை சேர்ந்த ஹோம்ஸின்(24) என்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஜுனன் மற்றும் முகமது ஜாபர் ஆகிய இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News