சாமியாவது பூதமாவது என்பவர்களா நீங்கள்?

நீங்கள் தான் கட்டாயம் கும்பகோணம் ரயிலடியில் உள்ள ரயில்வே பிள்ளையாரின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

Update: 2024-06-24 12:14 GMT

கற்பக விநாயகர் (கோப்பு படம்)

(இணையத்தில் படித்த ஒரு அற்புதமான பதிவினை நம் வாசகர்களுக்கு பகிர்கிறோம்).

கும்பகோணம் ரயிலடியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் மிக பழமையானது. 1955ல் திவான் ஸ்ரீனிவாசராவ் கடைசியாக கும்பாபிஷேகம் செய்ததாக ரயில்வேயில் வேலை பார்த்த சீனியர் சிடிசன்ஸ் கூறுவர். இக்கோயிலில் மதுரை சோமு, ராதா ஜெயலட்சுமி, சீர்காழி Dr. சிவசிதம்பரம் உள்ளிட்ட பல புகழ் மிக்க பாடகர்கள் விநாயக சதுர்த்திக்கு கச்சேரி செய்துள்ளார்கள்.

ரயிலுக்கு செல்பவர்கள் பலர் இக்கோயிலுக்கு வந்து குட்டிக்கொண்டு உண்டியலில் காசு போட்டுச்  செல்வது வழக்கம். பிள்ளை வரம் தரும் பிள்ளையார் என்று இவர் பக்தர்களால் நம்பப்பட்டு இங்கு வேண்டியபின் பிறக்கும் குழந்தையை பிள்ளையார் சன்னதியில் முதன் முதலில் போடும் வழக்கமும் உள்ளது.

இப்படி பிரபலமான பிள்ளையார் கோயிலை ரயில்வே போர்ட்டர் ஒருவர் சிறிது காலம் பராமரித்து பின் அந்த கோயில் தனக்கு சொந்தம் என கோர்ட்டில் வழக்கு போட்டார். சில காலம் பூஜை நின்றது. HR &CE துறையினர் வந்து கோயில் உண்டியலை திறந்து பணம் எடுத்துச்செல்வது மட்டும் தவறாமல் நடந்தது.

இந்நிலையில்,இந்த கோயில் ரயில்வேக்குத்  தான் சொந்தம் என கோர்ட் தீர்ப்புச்  சொன்னது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். போர்ட்டரும் போயாச்சு, HR &CEம் போயாச்சு.வழக்கம் போல் குருக்கள் பூஜை தொடர்ந்து வந்தது.

அப்போது திடீரென 2010ல் திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளர் ஒருவர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக அந்த பிள்ளையார் கோயிலை இடித்து விட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்ட உத்தரவிட்டார். அவர் கோயிலுக்கு ஒதுக்கிய பகுதி ரயில்வே குடியிருப்பு டிரைனேஜ் சங்கமிக்கும் இடம்.

இது தொடர்பாக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தியது. ஒரு நாள் நான் அந்த கோயிலுக்கு வழக்கம் போல் விநாயகரை தரிசனம் செய்ய சென்றபோது, ரயில்வே கேன்டீன் காண்ட்ராக்டர் ரயில் நிலைய மேலாளருடன் வந்து என்னிடம் எப்படியாவது கோயில் இடிப்பதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நான் திருச்சி ரயில்வே கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர் என்பதால் என்னால் எதாவது செய்ய முடியும் என்று (தவறாக) நினைத்தனர். நானும் முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு கண்களை மூடி பிள்ளையாரையே வேண்டிக்கொண்டேன்.

" பிள்ளையார் யாரையோ தேடுகிறார்; அவர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிந்து விடும். பிள்ளையாரை யாராலும் ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாது" என்று ஆறுதலுக்காக ஒரு வார்த்தையை கூறிவிட்டு வந்தேன்.

எனக்கு மிகவும் பரிச்சயமான மணி சங்கர் ஐயர் அப்போது மத்திய அமைச்சர். அவரிடம் பிரச்னையை சொன்னேன். அவரும் DRM ராம்சந்திரஜாட் என்பவருடன் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்து கோயிலை இடிக்காமல் ரயில்வே மேம்பாட்டு பணிகளை செய்ய வலியுறுத்தினார். ஆனால் அந்த பொறியாளர் மட்டும் மசியவே இல்லை. கோயிலை இடிக்க நாள் குறித்தாகி விட்டது. காலை 6 மணிக்கு இடிக்க ஏற்பாடுகள் நடந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள section engineer வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இரவு நிலைய மேலாளர் என்னை கோயிலுக்கு அழைத்தார். "சார், எல்லாம் கை மீறி போய்க் கொண்டிருக்கிறது. நாளை நான் லீவ் சொல்லிவிட்டு வந்துள்ளேன். கோயில் இருந்தால் மீண்டும் வேலைக்கு வருவேன் இல்லையென்றால் resign செய்து விடுவேன்" என்று வருத்தத்தோடு கூறிவிட்டுச்  சென்றார்.

அப்போது நான் அவரிடமும் "கண்டிப்பாக கோயிலுக்கு ஒன்றும் ஆகாது என்று தோணுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூற ஒரு சிதறு காய் போட்டுவிட்டு வந்தோம். மறு நாள் காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து எங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி மனமுருக வேண்டினேன்.

முதல் நாள் காலை பூஜையின் போது பிள்ளையார் கிரீடத்தில் வைத்திருந்த பூ சட்டென்று கீழே விழுந்தது. நல்ல சகுனம் என்று சற்று நிம்மதியாக இருந்தாலும் மனம் பதைபதைத்து. உண்மையில் நமது JC ஐயர் அளவிற்கு நான் தைரியசாலி கிடையாது. காற்றில் கம்பு சுத்துபவன் தான். சரியாக 7 மணிக்கு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த ரயில்வே போலீஸ் நண்பருக்கு போன் செய்து நிலைமை குறித்து கேட்டேன்.

அவர் இதுவரை யாரும் வரவில்லை, இந்து அமைப்பினர் சுமார் 20 பேர் தூரத்தில் நிற்கின்றனர் என்றார். இடிக்கத்  தொடங்கினால் போன் செய்யுங்கள் என்று சொல்லி வைத்தேன். என்ன ஆச்சர்யம்! கோயில் இடிக்கப்படவில்லை; காரணம் கேட்டபோது அப்பணிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிவு பொறியாளருக்கு இரவு திடீரென பக்க வாதம் வந்து விட்டதாம். அவர் சிறப்பு ஆம்புலன்ஸில் சென்று பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் காலை அதே 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

கோயில் இடிபடாத காரணம் புலப்படாவிட்டாலும், பிள்ளையார் தேடும் நபர் அவரல்ல என்பது மட்டும் தெரிந்தது. அதனால் கோயிலில் அவருக்காக சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். அதன் பிறகு கும்பகோணம் ரயில் நிலைய ஆய்விற்கு எந்த உயர் அதிகாரி வந்தாலும் கோயில் பக்கம் செல்லவே மாட்டார்கள்.

இருப்பினும் கோயில் இடிக்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் மாற்றவேயில்லை. மீண்டும் கோயில் இடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. இந்த முறை பிள்ளையார் யாருக்கும் suspense வைக்கவே இல்லை. நாள் குறித்து ஆர்டர் வெளியான மறு நாளே லஞ்ச ஊழல் ஒன்றில், கோயிலை இடிப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு முழு முனைப்பு காட்டிய தெலுங்கு கோட்ட பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.

அவரை மாட்டிவிட்ட காண்ட்ராக்டர் பெயர் விநாயகம். கைது செய்த சிபிஐ ஆபிசர் பெயர் கணேசமூர்த்தி. ஒரு வழியாக பிள்ளையார் தேடிய நபர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது. திருந்த வாய்ப்பு கொடுத்தும் திருந்தாமல் இருந்த அந்த பொறியாளரை வேறு வழியின்றி பிள்ளையார் தண்டிக்க வேண்டியதாயிற்று.

அதன் பிறகு 2016ல் கோயில் விஸ்தரிக்கப்பட்டது. கோயிலுக்குள் உள்ள பிள்ளையாரை மட்டும் ஒரு அங்குலம் கூட நகர்த்தவில்லை. நோய்வாய்ப்பட்டு நன்கு குணமடைந்த செக்க்ஷன் என்ஜினீயர் உட்பட ஓய்வு பெற்ற பல ரயில்வே நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், பயணிகள், பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கட்டட பணிகள் கும்பாபிஷேக செலவீனங்கள் தோராயமாக 5.50 லட்சத்திற்கு மேல் ஆனது.

பிள்ளையாரை வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற ஒரு NRIன் கனவில் பிள்ளையார் தோன்றி கோயில் கட்டச் சொல்ல, திடீரென்று வந்த அவர் கொடுத்த தைரியத்தில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ரூ. 4 லட்சம் வரை செலவுகளை அவர் தானாகவே ஏற்றுக் கொண்டார். உட்கார்ந்த இடத்திலேயே அணு அளவும் அசைந்து கொடுக்காத கற்பக விநாயகர் இன்றும் அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். பிள்ளையார் அதே இடத்தில் தான் இருக்கிறார். கடவுள் இருக்கிறார். யாரும் இந்த விஷயத்தில் குழப்பிக்கொள்ள வேண்டாம். இல்லையென சொல்பவர்கள் தங்கள் வாழ்நாள் முடியும் முன்பே கடவுளிடம் பாடம் படித்து சரணாகதி கடைந்த பல ஆயிரம் கதைகள் நமக்கும் தெரியுமே... சரணம் கணேசா!!!

நன்றி: indu balaji fb timeline post dt 2 July 2020. ( courtesy my friend PC) ஓம் கணபதயே நமக.

Tags:    

Similar News