டெல்லி ஜமா மஸ்ஜித்தில் பெண்கள் நுழைய தடை: இது தான் காரணம் என்கிறார் இமாம்

பிரார்த்தனை செய்ய வருபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் விளக்கமளித்துள்ளார்

Update: 2022-11-24 11:37 GMT

டெல்லியின் சின்னமான ஜமா மஸ்ஜித் நிர்வாகம்,  பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைவதைத் தடை செய்யும் அறிவிப்புகளை பிரதான வாயில்களுக்கு வெளியே வைத்துள்ளது.

இந்த விவகாரம் பரவலான சீற்றத்திற்கு வழிவகுத்ததால், ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம், பிரார்த்தனை செய்ய வருபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று விளக்கமளித்தார்.

சில நாட்களுக்கு முன்பு மூன்று முக்கிய நுழைவு வாயில்களுக்கு வெளியே அறிவிப்புகள் வைக்கப்பட்டதாக நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. தகவல்களின்படி, ஜமா மஸ்ஜித் நிர்வாகம் ஆண் துணையின்றி மசூதிக்குள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பெண்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது.

இருப்பினும், நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஜமா மஸ்ஜித்தில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு தொழுகைக்கு வரும் பெண்களுக்கானது அல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஷாஹி இமாம் சையத் அகமது புகாரியின் கூற்றுப்படி, பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில "சம்பவங்கள்" பதிவாகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

"ஜமா மஸ்ஜித் ஒரு வழிபாட்டுத் தலமாகும், அதற்கு மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் பெண்கள் தனியாக வந்து தங்களுடைய காதலன் அல்லது ஆண் நண்பருக்காக காத்திருப்பார்கள். இது அதற்கான இடம் அல்ல. வழிபாட்டுத்தலம் என்பதற்கான கட்டுப்பாடு உள்ளது" என்று இமாம் புகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

அது மசூதியாக இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், குருத்வாராவாக இருந்தாலும் அது வழிபாட்டுத் தலமாகும். வழிபடும் நோக்கத்திற்காக யாரும் வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. இன்றுதான், 20-25 பெண்கள் சேர்ந்த குழு சென்று பார்வையிட்டனர். அவர்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறது," என்று இமாம் புகாரி மேலும் கூறினார்.

இருப்பினும், பெண்கள் தங்கள் கணவர் அல்லது குடும்பத்தினருடன் மசூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜமா மஸ்ஜித் நிர்வாகம் கூறியுள்ளது.

"பெண்கள் நுழைவதற்கு தடை இல்லை. பெண்கள் தனியாக வரும்போது முறைகேடான செயல்கள், வீடியோக்கள் படமாக்கப்பட்டன. இவைகளை  தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். குடும்பங்கள் அல்லது திருமணமான தம்பதிகளுக்கு எந்த தடையும் இல்லை. இது மத ஸ்தலங்களுக்கு பொருத்தமற்ற சந்திப்பு இடமாக மாறுகிறது. அதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்று ஜமா மஸ்ஜித் பிஆர்ஓ சபியுல்லா கான் கூறினார்

டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால், இது பெண்களின் உரிமை மீறல் என்று கூறி, நோட்டீஸ் அனுப்புவதாகக் கூறினார்.

ஜமா மசூதிக்குள் பெண்கள் நுழைவதைத் தடை செய்வது முற்றிலும் தவறானது. ஒரு ஆண் தொழுகைக்கு எந்த வகையான உரிமை இருக்கிறதோ, அதே உரிமை பெண்களுக்கும் உண்டு. ஜமா மஸ்ஜித் இமாமுக்கு நான் நோட்டீஸ் அனுப்புகிறேன். இது போன்று பெண்கள் நுழைவதைத் தடைசெய்ய யாருக்கும் உரிமை இல்லை. , "என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

17 ஆம் நூற்றாண்டின் முகலாயர் கால நினைவுச்சின்னம் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

Tags:    

Similar News