திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே தம்பதி வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே பண்ணை வீட்டில் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

Update: 2023-07-03 14:23 GMT

கொலை நடந்த இடத்தில் வேடிக்கை பார்ப்பதற்காக கூடி நின்ற மக்கள்.

துறையூர் அருகே பண்ணை வீட்டில் தூங்கிய தம்பதி வெட்டி கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகில் உள்ள சோபனாபரம் காட்டுகொட்டகை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 27). இவரின் மனைவி சாரதா(வயது 22). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் காட்டு கொட்டகை பண்ணை வீட்டில் தங்கி இருந்தனர். ராஜ்குமார் வைக்கோல் திரிக்கும் மிஷின் வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.

நேற்றிரவு அவர் வழக்கம்போல பணி முடிந்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். இன்று மதியம் வரை அவர் வீட்டை விட்டு வெளியில் வராததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவரும் கயிற்று கட்டிலில் அரிவாள் வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் காரணமாக கொலையா? அல்லது தொழில் போட்டியில் கொலை நடந்ததா?  என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News